Tuesday, 5 February 2013




எந்த முகத்தைப் பார்த்தாலும்

எல்லாம்

பார்த்த முகம்தான்



கண்ணாடி

அணிந்தும் அணியாமலும்

பொட்டு

வைத்தும் வைக்காமலும்


மீசை

இருந்தும் இல்லாமலும்

கண்ணுக்குத் தெரியும்

ஒவ்வொரு  முகத்திலும்



எதோ ஒரு

தெரிந்த முகத்தின்

பிரதிபலிப்பு.

Friday, 1 February 2013

நகர வீதிகளெங்கும்

அலைந்து தெறித்தது பார்வை.

நூற்றுக்கணக்கான

முகங்களும் பொருட்களும்

சுமையேற்றிய கண்களில்

பதிந்ததென்னவோ

கொய்யாப்பழ முகமொன்றுதான்



ஒவ்வொரு முறை

கொய்யாப்பழ முகத்தைப் 

பார்க்கும் போதும்

மனதில் எழுகிறது

நினைவில் பதிந்த

முகமொன்றின் நிழல்



பண்டிகை நாளின்

பகற்  பொழுதில்

பரணிலிருக்கும் பழையவைகள்

கிளறப்படும் போது

அப்பாவின் நெஞ்சில்

அடைக்கலமான

அம்மாவின்

இளமைக்கால கொய்யாப்பழ

முகப்பதிவு.